திருப்பூர்: சாலையோரத்தில் குவிந்து கிடந்த குப்பையில் இருந்து தீ ஏறிய தொடங்கி அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் முறையான திடக்கழிவு மேலாண்மை இல்லாததால், தினந்தோறும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை அங்காங்கே சாலையோரத்தில் மாநகராட்சி பணியாளர்கள் குவித்து வைத்து வருகின்றனர். குப்பைகளை முறையாக அகற்ற முடியாத சூழலில் மாநகராட்சி அதிகாரிகளே அவற்றை தீவைத்து எரிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆங்காங்கே சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து எரித்து வருகின்றனர். தினம்தோறும் குப்பைகள் எரிவதும் அவற்றை தீயணைப்புத் துறையினர் சென்று அணைப்பதும் என்பது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.
இந்த குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படாத நிலையில் இவற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து கடும் புகைமூட்டம் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 17) இரவு ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை தீப்பிடித்து எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து வெளியேறிய புகை மூட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.